Thursday, October 22, 2009

தீபாவளி


தீபாவளி


அதிகாலை......

அம்மாவின் அதட்டல்

இன்றாவது வேளைக்கே

எழுந்திறேன்டி



என்னம்மா நீ கொஞ்ச நேரம்

விட மாட்டேன் என்கின்றாய்

என புழம்பிக் கொண்டே

எழுந்தாள் தீபிகா



எண்ணை குளியல்

ஏற்றதான பட்டாடை

உடுத்தி வந்து

தீபமேற்றி நின்றவளை

என் கண்ணே பட்டுவிடும் என

சுற்றிப் போடும் அன்னை



குடும்பத்தோடு ஒன்றாக

ஆலயம் சென்று

ஆண்டவனை மன்றாடி

மன திருப்தியோடு

வீட்டை அடைந்தனர்



அப்பா.....

அவள் உணர்வுகளுக்கு

உயிர் கொடுக்கும்

தெய்வத்தின் மறு உரு

விழுந்து வணங்குகின்றாள்



கைவிஷேடம் பெறத்தானென

கேளி செய்த தம்பியை

உண்டு இல்லையென

பண்ணிவிட்டாள்

அவளுக்கு தெரிந்த மொழிகளில்



உற்றார் உறவினர்

நண்பர்கள் கூடி

பகிர்ந்தளித்து பகிர்ந்துண்ட

பலகாரங்கள்



பக்கத்து வீட்டு அஞ்சலியை

அழைத்துக் கொண்டு

முன் வீட்டு அகிலா தொடக்கம்

எதிர் தெரு கவிதா வரை

சந்தித்து வாழ்த்தி திரும்பினாள்



காதை கிழிக்கும் சத்தத்தோடு

பட்டாசுகள்

கலர் கலர் வாண வேடிக்கைகள்

கோடி இன்பம் தந்து சென்றது



பட்டாம் பூச்சியாய்

சிறகடித்தது அவள் மனது

என்றுமே இந்த இன்பம்

வேண்டுமென பிரார்த்தித்தாள்

தன்னை அறியாமல்



யாரோ தன்னை தீண்டும் உணர்வு

திடுக்கிட்டு “அம்மா” என

அலறி எழுந்தவளுக்கு

ஒரு நிமிடம் ஒன்றுமே

புரியவில்லை



சில நிமிடங்களில் தான்

தன்னை உணர்ந்து

பழைய நிலைக்கு வந்தாள்



பக்கத்து முகாம் பவானி தான்

அவளை எழுப்பியது

உன் குடும்பத்தை பற்றி

கனவு ஏதும் கண்டாயா?

கேட்டவள் பவானி தான்



”ம்ம்” என்பதை தவிர

வார்த்தைகள் வர மறுத்தன



என்னவென்று வார்த்தை வரும்

அவள் அத்தனை உறவுகளையும்

தொலைத்து அனாதையாய்

நிற்கும் போது......?



கடவுளே எதற்காக

இத்தனை கொடுமைகள்

எம் இனத்திற்கு

கடவுளிடம் நொந்து

கொள்கின்றாள்

கண்ணீர் அருவியானது.



அதே பிரார்த்தனை தானே

நம் ஒவ்வொருவருக்குள்ளும்

மீண்டும் மீண்டும் பிரார்த்திப்போம்

எம்மினம் காத்தருளும் படி

இனியொரு மரணதேசம்

வேண்டாமென

தமிழருக்கான தேசம் கொடு

அதில் தமிழர் எம்மை வாழவிடு என




ஜோ. அமிகீர்த்தி



No comments:

Post a Comment